கடந்த சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியின் தலைவர் ஆண்டனி அல்பானிஸ் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கேன்பரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக அவர் பதவியேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய அவர், ஆஸ்திரேலியாவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் வல்லரசாக மாற்றுவது, தேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தை நிறுவுவது, நாட்டின் சுகாதார அமைப்பை உலகத்தரத்தில் வலுப்படுத்துவது குறித்து பேசினார். அவருடன் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நன்றி ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவின் பிரதமராக பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்ற கையுடன் அவர், குவாட் சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டில் அவருடன் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடையே தலைவர்களும் பங்கேற்கின்றனர்.