இந்தோ – பசிஃபிக் சூழலில் நிலவும் சவால்களை சமாளிப்பதற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
வர்த்தக மோதல்கள் மற்றும் சீனா உடனான பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கவலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த ஆஸ்திரேலியா முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக ஜப்பான், இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மெய்நிகர் தொழில்நுட்பம் மூலமாக ஆஸ்திரேலியா பிரதம மந்திரி ஸ்காட் மாரீசன், ஜப்பான் நாட்டு பிரதமர் ஃப்யூமியோ கிஷிடாவை சந்தித்தார். அப்போது இருநாடுகளிடையே பல ஆண்டுகளாக ஆலோசிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக கட்டமைப்புகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இருநாட்டு தலைவர்களும் பாதுக்காப்பை ஒட்டிய பரஸ்பர புரிதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்மூலம் ராணுவப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒருவருக்கொருவர் தடையின்றி செயல்பட வழிவகுக்கும் என்று ஆஸ்திரேய பிரதமர் மாரீசன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் புதிய தொடக்கமாக இதை பார்ப்பதாக ஜப்பான் நாட்டு பிரதமர் கிஷிடா கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் கிஷிடாவின் ஆஸ்திரேலியா பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Link source: https://ab.co/3f11gQn