விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுக்கள் வந்திருக்கும் நிலையில், மெல்போர்ன் தவிர விக்டோரியாவின் புற நகர் பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெல்போர்ன் நகரில் வணிக வளாகங்களை திறக்கவும், பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை தொடர்கிறது.
இந்நிலையில் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,102 நபர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவருக்கு , முதியோர் இல்லம் ஒன்றில் இருந்து பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்றும், தொடர்பறிதல் மூலம் இவரை கண்டறிந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை முதன்மை அதிகாரி பிரெட் சூட்டன், கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் பாதையில் மாகாணம் பயனிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அறிகுறிகள் தென்பட்டாலோ, அல்லது அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தாலோ தொற்று பரிசோதனை அவசியம் என்றும் பேராசிரியர் சூட்டன் வலியுறுத்தியுள்ளார்.
தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் அதே நேரத்தில் அரசால் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆனால் மாகாணத்தில் அண்மையில் சிலருக்கு ஏற்பட்ட கப்பா வகை வைரஸ் பரவல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிவது அவசியம் என்றும் அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி சூட்டன் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் பகுதியில் உள்ள 14 புறநகர் பகுதியில் கழிவு நீரை ஆய்வுக்குட்படுத்தியதில் கொரோனா வைரஸ் தடங்கள் கண்டறியப்பட்டதாகவும், அப்பகுதியி வசிக்கும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று பரவல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் தற்போது 68 பேர் கொரோனவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/35jGIxQ