ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவலை சமாளிக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது முன்களப்பணியாளர்கள், முதியோர்கள், 50 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடையே தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை போக்கும் விதமாக மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் மார்க் மேக்கோவன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஜூன் 10 ஆம் தேதி முதல் 30 வயது முதல் 49 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை முதல் இதற்கான முன்பதிவு தொடங்கும் என்றும் முதல்வர் மார்க் மேக்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் தெரிவித்துள்ளார். மேற்கு ஆஸ்திரேலியவில் உள்ள 16 வயதை கடந்த பூர்வக்குடி மக்களுக்கும், டோரஸ் தீவில் வசிக்கும் மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 50 வயதை கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் முதல்வர் மார்க் தெரிவித்துள்ளார்.
ஜூன் இறுதிக்குள் ஒரு வாரத்திற்கு 30000 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தும் அளவிற்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை மையங்கள், நடமாடும் தடுப்பூசி மையங்கள் மூலமாக தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் மருந்தகங்களையும் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் வாரத்திற்கு சுமார் 14 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், ஊரடங்குக்கு தேவையிருக்காது என்றும் என்று முதல்வர் மார்க் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது 1,57,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் , மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ரோஜர் குக் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்தவர்களில் சுமார் 60 % பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் குக் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3wasta8