இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மொரீசியஸ் தீவில் இருந்து 1000 கிமீ தொலைவில் அமைந்துள்ள தீவு அகலெகா. இது தொடர்பாக புலனாய்வு கட்டுரை வெளியிட்டுள்ள அல்ஜசீரா செய்தி நிறுவனம், இத்தீவில் இந்தியா ரகசிய ராணுவ தளத்தை கட்டிவருவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக இப்பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ரகசிய ராணுவ தளத்தில் சுமார் 3000 அடி நீளத்தில் இராண்டு விமான ஓடுபாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக 12 கப்பல்கள் மூலம் கட்டுமான பொருட்கள் இந்தியாவில் இருந்து அகலெகா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனா செல்லும் அனைத்து பெரிய சரக்கு கப்பல்களும் இந்த வழித்தடத்தில் தான் பயனிக்கும் என்பதால் இந்த ராணுவத்தளம் அமையவுள்ள இடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர் Samuel Bashfield, அண்மைக்காலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் புவி அரசியல் சார்ந்த மாற்றம் சர்வதேச கவனம் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவால் அமைக்கப்படும் ராணுவ தளம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் Samuel Bashfield தெரிவித்துள்ளார். இந்த ராணுவ தளத்தை கண்காணிப்பு பணிகளுக்கு இந்தியா பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளர். 2018 ஆம் ஆண்டே இது தொடர்பான செய்திகள் வெளியான போது அதனை இரு நாடுகளும் மறுத்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான ராணுவ உறவு மேலும் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே அண்மைக்காலமாக உறவு மேம்பட்டு வருகிறது.
குறிப்பாக தென் கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 4 போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்படும் என்றும், அப்போது நடைபெறும் குவாட்( quad) ராணுவ பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்கும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
குவாட் ராணுவ கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
விரைவில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டுட்டன் இந்தியா செல்ல இருப்பதாகவும், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே உள்ள ராணுவ உறவை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/2VrEKtP