இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், அறிவிப்பின் படி, நாட்டில் உள்ள சுகாதாரத்துறை, சமூக பாதுகாப்பு பணியாளர்கள் அனைவருக்கும் அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 90% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும், இன்னும் 1 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக செலுத்திக்கொள்ள வில்லை என்பது தெரியவந்துள்ளது.
மருத்துவக் காரணங்களுக்காகவும், நோயாளிகளை நேரடியாக சந்திக்க வாய்ப்பில்லாத பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் விலக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஸ்காட்லாண்ட் , வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு பொருந்தாது என்றும் அமைச்சர் சஜித் ஜாவித் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி என்ற நடைமுறையை பின்பற்றுகின்றன.
தங்கள் உடல் நலத்துடன், மற்றவர்களின் உடல் நிலையிலும் சுகாதாரத்துறை பணியாளர்களின் ஆரோக்கியம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இந்த கொள்கை முடிவை அரசு எடுத்திருப்பதாக அமைச்சர் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கும் தொழிலாளர் கட்சியி பிரதிநிதி ஜோனதான் ஆஸ்வோர்த், ஆனால் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு, இந்த அறிவிப்பு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்னொரு ஊரடங்கை தவிர்க்கவும், பொருளாதார பாதிப்பை சீர் செய்யவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Link Source: shorturl.at/rxACE