மெல்பேர்ன் மேற்கு பகுதியிலுள்ள பெண்கள் சிறையில் பழங்குடியினப் பெண் விக்டோரியா நெல்சன் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த 2020, ஜனவரி 2-ம் தேதி சிறை அறையிலே மரணமடைந்தார்.
அவருடைய உடலை பிணக்கூராய்வு செய்ததில் விக்டோரியா நெல்சன் குடல் பகுதியில் ஏற்படும் அரிய வகை நோய் தொற்றுக்கு ஆளானது தெரியவந்தது. மேலும் அவர் போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, இரவு நேரத்தில் சிறைப் பணியாளர்களை அவர் 13 முறை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் யாரும் அவரை சரிவர கவனிக்கவில்லை. இதனால் கடைசி இரண்டு நாட்களில் உதவிக்கு யாரும் வராததால் உயிரிழந்தார் என்று சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
மேலும் சிறைப் பணியாளர்களால் விக்டோரியா நெல்சன் கீழ்தரமாக நடத்தப்பட்டார் என்று தன்னுடைய வாக்குமூலத்தில் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் விக்டோரியா நெல்சனின் உடல்நிலை குறித்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்தது என்றும் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பழங்குடியினப் பெண் விக்டோரியாவின் உடல்நிலை குறித்து சிறை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக சிறையிலேயே பழங்குடியினப் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணை புதிய திருப்பதை கண்டுள்ளது.