ஆஸ்திரேலியாவில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக நிலவும் குழப்பங்களை களைவதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வரைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிமுக நிலையிலேயே அந்த சட்டத்திற்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. சட்டத்திருத்தம் தற்போது இருக்கும் பிரச்சினைளுக்கு தீர்வு காணாமல் புதிய பிரச்சினைகளை கண்டறியும் வகையில் உள்ளதாக தெற்கு ஆஸ்திரேலிய செனட்டர் Rex Patrick கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த வாக்காளர் அடையாள அட்டை மறுசீரமைப்பு தொடர்பான விவகாரங்களுக்கு தான் ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் ஒருமைப்பாடு தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துவதை காட்டிலும் அரசியல் ஒருமைப்பாட்டிற்கு ஸ்காட் மோரிசன் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக Rex Patrick விமர்சனம் செய்துள்ளார்.
புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் வாக்காளர்கள் தங்களது பெயரையும் முகவரியையும் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் தற்போதைய விதிகளை மாற்றி வாக்களிக்கும் போது தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையில் பாஸ்போர்ட், மருத்துவ அட்டை பிறப்பு சான்றிதழ் அல்லது குடியுரிமைச் சான்றிதழ் போன்றவற்றை இணைத்து இருக்க வேண்டும். மேற்கண்ட அடையாள அட்டைகளை வழங்க முடியாதவர்கள் மற்றொரு வாக்காளர் இடம் தனக்காக பரிந்துரைத்து உறுதி அளிக்குமாறு கேட்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முறைகளில் மேற்கொள்ளவேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான இந்த வரைவு சட்டம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், இது தொடர்பாக விரிவாக விவாதம் நடத்தப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட மக்கள் வாக்காளர்களாக இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப தேவையானது என்றும், ஆனால் இந்த வரைவுச் சட்டத்தை அறிமுக நிலையிலேயே மனித உரிமை, சமூக நீதி வழக்கறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகியவை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது வாக்காளர் உரிமையை நிலைநாட்டுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், அதனை களையும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
Link Source: https://bit.ly/3nMl0eI