ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு காரணமாக முடக்க நிலை அறிவிக்கப்பட்டு சர்வதேச எல்லைகளில் மூடப்பட்ட நிலையில், தற்போது 20 மாதங்களுக்கு பிறகு பல்வேறு மாகாணங்களில் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து சர்வதேச எல்லைகள் திறக்கப்பட உள்ளன. நவம்பர் 1 தேதி முதல் எல்லைகள் திறக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்து வரும் ஆஸ்திரேலிய நாட்டினர் சொந்த நாடு திரும்பும் முயற்சியில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
சுமார் 47 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் பல்வேறு நாடுகளில் சிக்கி உள்ள நிலையில், சர்வதேச எல்லை திறப்பு அறிவிப்பை அடுத்து பயணிகளுக்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எந்தவித தடையுமின்றி, தனிமைப்படுத்துதல் இன்றி நாடு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, ACT ஆகிய மாகாணங்களில் உள்ளே செல்லவும், வெளிநாடுகளுக்கு பயணிக்கவும் எந்தவித தடையும் இல்லை. அதே நேரத்தில் மேற்கு ஆஸ்திரேலியா மட்டும் இன்னும் எல்லை திறப்பு குறித்த உரிய அறிவிப்பை வெளியிடவில்லை. மற்ற மாகாணங்களில் இருந்து எந்தவிதத் தடையுமின்றி பயணிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விமானத்தில் பயணம் செய்து வரும்போது அவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக சிக்கித் தவித்து வரும் ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பும் மகிழ்ச்சியில் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வர்த்தகப் பயன்பாடு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகவும் அவை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்பதால் தாங்கள் மீண்டும் கவலையில் இருப்பதாகவும் Peter Davies, Gauri குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் விமான சேவை நிறுவனமான Qantas தனது சர்வதேச பணியாளர்கள் 6 ஆயிரம் பேரையும் டிசம்பர் மாதத்தில் முழுவதுமாக பணிக்கு வருமாறு கூறியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் முழு நேர சேவை பணியில் ஈடுபட உள்ளதாகவும் அதற்காக தங்கள் முழுவீச்சில் தயாராகி வருவதாகவும் Qantas நிறுவனம் கூறியுள்ளது.
குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா உள்ளிட்ட மாகாணங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கட்டுப்பாடுகள் முழுவதுமாக தரப்பட வேண்டும் என்றும் எல்லைகள் திறக்கப்பட்டு வீடுகளில் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தொற்று பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் டிசம்பர் மாதத்திற்கு குறைந்தபட்சம் 75 சதவீதம் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் அந்தந்த மாகாண அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
Link Source: shorturl.at/gnsLR