ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுவருகிறது.
மெல்போர்ன் பகுதியில் தொற்று பாதித்த நபர் பொது இடங்களுக்கு சென்றதால் பலருக்கு தொற்று பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதன்காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். கடந்த செய்வாய்கிழமை மட்டும் சுமார் 15868 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது விக்டோரியாவில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகப்பட்ச தடுப்பூசி எண்ணிக்கையாகும்.
விக்டோரியாவில் ஒரு நாளில் சராசரியாக 8000-7500 வரையிலான தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 10400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இது வரை 38 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
விக்டோரியா சுகாதாரத்துறை அமைச்சர் மார்டின் போலி கூறிய போது தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து ஏராளமான அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசி மீதான தயக்கம் மக்களிடையே நீங்கி வருவதாக அமைச்சர் மார்டின் போலி தெரிவித்துள்ளார். ராயல் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் அதிகாரி அனிதா முனோஷ் இது குறித்து கருத்து தெரிவித்த போது தகுதியுள்ள நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இன்னும் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலத்தில் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விக்டோரியாவில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் அனைத்து கட்டமைப்புகளுடன் , தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை அதிகாரி பிரிட் சுட்டன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்துவதில் பின்பற்றக்கூடிய வயது கட்டுப்பாட்டை தளர்த்தி , விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவில் தடுப்பூசி முன்பதிவு செய்ய 1800 675 398 என்ற எண்ணை தொடர்புக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3bVwvLJ