இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சந்தை மதிப்பை விட விலைக் குறைவாக இந்த தடுபூசிகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
அண்மையில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றுள்ள ரஷ்யா நாட்டு ஸ்புட்னிக்-வி மட்டுமின்றி நோவாவாஸ், மாடனா, பைசர், மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளின் விலை அதிகமாக இருக்கும் என மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் தலையிடு காரணமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இலவசமாக அல்லது 250 ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஆனால் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளின் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும் என இத்துறையை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிஷீல்டு உற்பத்தி செலவு அதிகம் என்றும், மத்திய அரசு கோரிக்கையை ஏற்று குறைந்த விலையில் தடுப்பூசியை விநியோகம் செய்வதாகவும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு மத்திய அரசுக்கு 170 ரூபாய்க்கு அளிக்கப்பட்டு, அதை பொதுமக்களுக்கு மத்திய அரசு விலையில்லாமல் அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கி வருகிறது. தனியார் தடுப்பூசி மையங்களில் 250 ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுவரை 10.85 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், மேலும் விரைவாக இந்த நடவடிக்கை நாடு முழுவதும் நடைபெறவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதால், கூடுதலாக தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைப்பது பயன்தரும் என கருதப்படுகிறது. இதனால் வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு எடுத்துள்ள முடிவின்படி, வெளிநாடுகளில் உரிய அனுமதி பெற்று உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த தனியாக முழுவீச்சான சோதனை ஓட்டம்
தேவை இல்லை. உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த தடுப்பூசிகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம்.
இந்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க புதிய விதிகள் கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால் இதற்கென தனியாக சோதனைகளை நடத்த தேவை இல்லை. பிற நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் அவசரகால பயன்பாடு அனுமதி வழங்கப்படும்.
இத்தகைய தடுப்பூசிகளை பயன்படுத்தும் முதல் 100 பயனாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது ஏழு நாட்களுக்கு கண்காணிக்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளது. பின்னர் இந்தியாவில் நடத்தவேண்டிய சோதனைகளை “பிரிட்ஜ் ட்ரையல்ஸ்” என்கிற முறையில் சுருக்கமாக நடத்த அனுமதி அளிக்கலாம் என தடுப்பூசி விவகாரங்களுக்கான வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த அடிப்படையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளின் விலை பல ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் எனவும், இவை முழுக்க முழுக்க தனியார் மருத்துவமனைகள் மூலம் விநியோகிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே 11 கோடிக்கு மேல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்ந்து இலவசமாக அல்லது குறைந்த விலையில் ஏழை மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும், இறக்குமதி செய்யப்படும் அதிக விலைகொண்ட தடுப்பூசிகள் மேல்தட்டு மக்களின் பயன்பாட்டுக்கு உபயோகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
கொரோனா அலை அதிகம் பாய்ந்தாலும் இன்னமும் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் தடுப்பூசி மையங்களை இவர்கள் தவிர்க்க நினைத்தால், தனியார் மருத்துவமனைகள் மூலம் விநியோகத்துக்கு வரக்கூடிய இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை அளிக்கும் மையங்களில் நெரிசல் இருக்காது என்பதால், இவர்கள் அந்த தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என கருதப்படுகிறது.
ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் தற்போதய கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை விட அதிக விலையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் மூலம் ஆரம்பத்தில் இறக்குமதி முறையில் இந்தியா வரும் ஸ்புட்னிக்-வி, பின்னர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பிற நிறுவனங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.