Northern Territory பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமூகப் பரவல் மூலமாக ஒரே நாளில் ஒன்பது பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் Katherine, ராபின்சன் நதி உள்ளிட்ட பகுதிகளில் முடக்க நிலை நீ்ட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் Michael Gunner அறிவித்துள்ளார்.
Greater Katherine பகுதியில் ஏற்கனவே மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த முடக்க நிலை தற்போது ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர் பூர்வகுடியைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு தகுதி வாய்ந்த மக்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் Michael Gunner கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராபின்சன் நதி பகுதிக்கு விரைவு மருத்துவ குழு மற்றும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. திருடியே செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் Michael Gunner தற்போது இருக்கக்கூடிய சூழல் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே Northern Territory பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராபின்சன் நதியை ஒட்டியுள்ள Carpentaria சமூகத்தை சேர்ந்த பூர்வகுடி மக்கள் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், உடனடியாக தடுப்பூசிகளை செலுத்துமாறும் முதலமைச்சர் Michael Gunner உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை 77 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில், 87 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு்ள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக முடக்க நிலை அங்கு அறிவிக்கப்படும் என்றும் அதனை கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. Katherine பகுதிகளும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கும் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் விரைவு மருத்துவக் குழுக்களை அனுப்புமாறு முதலமைச்சர் Michael Gunner தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் தொற்று பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருவதாகவும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும், முடக்க நிலை நீட்டிக்கப்பட்டால் அதன் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3FfCy9Y