ஆஸ்திரேலிய குடிமக்கள் சுமார் 9000 பேர் தற்போது இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, வர்த்தகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இவர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்
இந்தியாவில் கோரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தினசரி உச்சம் தொட்டு வருகின்றன.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதி வரை இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷிவாங் தேசாய் என்பவர், கல்வி சார்ந்த பணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகை புரிந்ததாகவும்,தற்போது தன்னுடைய பெற்றோர்களுடன் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தினசரி ஏற்படும் உயிரிழப்புகளை பார்க்கும் போது மனதில் கடும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள தங்கள் பெற்றோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியாவில் சுமார் 323000 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று பாதித்த 2771 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், தினசரி மயானங்களில் எரியூட்டக்கூடிய உடல்களின் எண்ணிக்கை அச்சமூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் தொற்று
பரவல் ஏற்படுவதை தடுக்க இந்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை புரிந்துக்கொள்வதாகவும்
தேசாய் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் காரணமாக வருவாய் இன்றியும், கையிருப்பில் இருந்த சேமிப்பும் கரைந்துவிட்டதாக தெரிவிக்கும் தேசாய், ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அரசு இயக்குவதாக அறிவித்துள்ள மீட்பு விமானத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிகை எடுக்க வேண்டும் என்றும் தேசாய் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரம் ஆஸ்திரேலியா திரும்பும் தாங்கள் அரசின் வழிமுறையை பின்பற்றி தனிமைபடுத்துதலுக்கு உட்பட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை கைவிட்டுவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்..
இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு சுமார் 500 வெண்டிலேட்டர்கள் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கவும் ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது..
Link Source: https://ab.co/32U5Wl1