குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பெரும்பாலான பிராந்திய பகுதிகளில் குறிப்பிட்ட தடுப்பூசி இலக்கை இன்னும் அடையாத நிலையில், அங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக சிக்கல்கள் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆனால் பெரும்பாலான பிராந்திய பகுதிகளில் 80% என்ற இலக்கு எட்டப்படவில்லை என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளரும், தடுப்பூசி பொறுப்பாளருமான Shane Chelepy தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு நாளில் புதிய வைரஸ் பாதிப்பு கள் எதுவும் பதிவாகாத நிலையில், எல்லைகளை திறப்பதற்கு மாகாண அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பிட்ட இலக்கை அடையாத காரணத்தால் எல்லைகளை திறக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாத மத்தியில் 80% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம் களில் ஒரு பகுதியில் மட்டும் 113 பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டு இருப்பதாகவும், அதில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த பட்டதாகவும்
Shane Chelepy தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 28 ஆயிரத்து 994 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட தாகவும் அவர் கூறியுள்ளார்.
நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், பெரும்பாலான பகுதிகளில் இந்த தடுப்பூசிகள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். குறிப்பிட்ட பிராந்திய பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும் அதனை சரிசெய்யும் பட்சத்திலேயே எல்லைகளை திறப்பது தொடர்பான உரிய முடிவை அரசு எடுக்கும் என்றும் Shane Chelepy தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விவகாரத்தில் குயின்ஸ்லாந்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும் உடனடியாக மற்ற பகுதிகளைப் போல வேகம் எடுக்க வேண்டும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் Paul Griffin தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் நடைமுறைகளை குயின்ஸ்லாந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வார இறுதி நாட்களில் போடப்படும் தடுப்பூசி முகாம்களை பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்களில் அமைத்து தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3me52KO