ஆஸ்திரேலியாவில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 50. 15 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உள்ளது. எனவே குறைந்தது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில் மேலும் தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லடசத்து 47 ஆயிரத்து 796 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 70 முதல் 80 சதவீதம் வரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் பல்வேறு தளர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதனை நோக்கி தீவிரமாக செல்லும் முயற்சியில் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் 25 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நாம் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான சூழல் அமையும் என்று தலைமைச் செவிலிய அதிகாரி Alison McMillan கூறியுள்ளார். அக்டோபர் மாதத்திற்கு தேவையான ஃபைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகள் முழுமையாக ஆஸ்திரேலியா வந்தடைந்து உள்ள நிலையில், முழு ஒதுக்கீடான 11 மில்லியன் தடுப்பூசிகளும் உரிய கால அளவில் கிடைக்கப்பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் தொற்றுப் பரவல் நாள் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டு வருவதால் அங்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி வினியோகம் சீராக இருப்பதால் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
Link Source: https://bit.ly/3EOIyHt