ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் குறித்து கருத்து தெரிவித்த கோர் லாஜிக் நிறுவனத்தின் எலிசா ஓவன், ஆஸ்திரேலியாவில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் கடந்த மார்ச் மாதம் மட்டும் வீடுகளின் விலை சராசரியாக 2.8 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தாக்கத்திற்கு பிறகு அண்டை நாடான நியூசிலாந்தில் வீடுகளின் விலை சாராராசியாக 20 சதவீதம் வரை உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வரி முறைகளில் மாற்றம் கொண்டுவந்தார். உதாரணமாக வீடுகளை விற்பனை செய்வதால் கிடைக்கும் மூலதன இலாபத்திற்கு இனி வரி விதிக்கப்படும் என்று ஜெசிந்தா அறிவித்துள்ளார். விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் வீடு என்ற நிலை ஏற்படும் என்று அவர் தெளிவுபடுத்தவுள்ளார். அதே போன்று வீட்டுக்கடன் வழங்கும் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போன்ற ஒரு சந்தை நிலை தற்போது ஆஸ்திரேலியாவில் காணப்படுவதாக பொருளாதார நிபுணர் பெலிசிட்டி எம்மட் தெரிவித்துள்ளார். இந்த போக்கு தொடர்ந்தால் இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் வீடுகளின் மதிப்பு 17 சதவீதம் வரை உயரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் நியூசிலாந்தை போல வரி முறையில் மாற்றம் செய்தவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்று கூறும் பெலிசிட்டி, தேர்தலில் மோரிசன் சொத்து வரி உயர்வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டுகிறார்.
அதே நேரம் வங்கிகள் ஒழுங்கு முறை ஆணையமான APRA கடன் வழங்கும் முறையில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் எம்மட் தெரிவித்துள்ளார்.