ஆஸ்திரேலியாவின் வடக்கு அடிலெய்ட் நகரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையே கடும் கண்டத்திற்கு உள்ளாகி உள்ளது.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி 7 வயதுச் சிறுமியான Audrey கடுமையான வலியோடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு பிற்பகல் 3 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அவள், குடல்வால் அழற்சியால் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருந்ததோடு, குடல் வால் சிதைந்த நிலையில் இருந்ததால் வலியை பொறுக்க முடியாமல் சிறுமி தவித்துள்ளார். மூன்று மணி நேரம் கழித்து ஒரு மருத்துவரும், செவிலியரும் சிறுமியை பரிசோதித்துள்ளனர். இந்நிலையில் இரவு 11.30 மணிக்கே சிறுமி Audreyவுக்கு குடல்வால் அழற்சியை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன்பின்னர் நோய்த்தொற்று சரியாக சிறுமி 9 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமியின் பெற்றோர்களான David, Annabelle Oates ஐ தொடர்புகொண்ட நிர்வாகம் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாத நிகழ்வு என்றும் வருத்தம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் செய்தித்தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், சிகிச்சையில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
இத்தகவலை தெரிவித்துள்ள சிறுமி Audrey வின் பெற்றோர்கள், அந்த இக்கட்டான நேரத்தில் நடந்தவற்றை நினைவு கூர்ந்தனர். சிதைந்த குடல்வால் அழற்சியோடு அவசர சிகிச்சைப்பிரிவின் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தோம். அவள் பற்களை கடித்துக் கொண்டு வலியால் துடித்ததை தங்களால் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். அவள் உரிய நேரத்தில் மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு இருந்தால் இந்த கொடூர நிலையை தவிர்த்து இருக்கலாம் என்றும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இந்த செயலுக்கு பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கவனக்குறைவால் ஏற்பட்ட மிக மோசமான நிகழ்வு இது என மருத்துவப் பேராசிரியர் Warren Jones கூறியுள்ளார். காத்திருப்பு அறையில் சுமார் எட்டரை மணி நேரம் வலியால் கதறித்துடித்த நிலையில் சிறுமியை விட்டது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இந்த மருத்துவமனையில் தேவைகளை தீவிரமான சுகாதாரத்துறை அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்றும், மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ள விரிவாக்கப்பணிகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் Warren Jones சுகாதாரத்துறை அமைச்சர் Stephen Wade க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, அடிலெய்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அலட்சியம் பல்வேறு நிகழ்வுகளில் தொடர்வதாகவும், ஆம்புலன்சை கையாளுவதில் பெரும் அக்கறையின்மை இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.