Stalings Lane பகுதியில் வெள்ள பாதிப்புகளில் சிக்கிய பொதுமக்களில் ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு படையினர் காருடன் வெள்ளத்தில் சிக்கிய 60 வயது நபரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த நபர் வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு விக்டோரியாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை காரணமாக ஏராளமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தஞ்சம் புகுந்துள்ளனர். Traralgon Creek பகுதியில் வெள்ளம் அதிக அளவு சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள 200 குடும்பங்களை வேறு பகுதிக்கு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் முதியோர்கள் உடன் படகுகள் மூலமாக அவர்கள் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான மழை வெள்ளம் காரணமாக வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள கூடைப்பந்து மைதானம் ஒன்று முழுவதுமாக நீரால் சூழப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தவித்து வந்த சிலர் மீட்கப்பட்டு வேறு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Traralgon ஷேக்ஸ்பியர் தெரு பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளதால் அவர்கள் உடனடியாக தற்காலிக முகாம்களுக்கு இடம்பெயறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நிறுத்தத்தில் இருந்த கார்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் மூழ்கி சேதம் அடைந்ததாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Latrobe Valley பகுதியில் வெள்ள நீர் வடியாத நிலையில் பகுதியே கடல் போல் காட்சியளிக்கிறது. அவசர தேவைகளுக்கு மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருவதாகவும் காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலமாக அப்பகுதியில் உள்ள மக்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இந்த மழை வெள்ள பாதிப்புகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று கிழக்கு விக்டோரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3vhQdIa