குயின்ஸ்லாந்து மாகாணத்தின் Gold Coast உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இரண்டு தினங்களுக்கு 170 முதல் 100 மில்லி மீட்டர் வரை மழை பொழிவு இருக்கும் என்றும் எதிர்பார்த்த அளவைவிட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சூழல் இருப்பதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
அடுத்த 12 முதல் 24 மணி நேரம் வரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவசர கால சேவை மையத்திற்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. காற்று மற்றும் கனமழை காரணமாக தென்கிழக்கு கடல் பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும், மூன்றரை மீட்டர் வரை கடல் அலைகள் எழும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் கோல்ட் கோஸ்ட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வெள்ள பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மிக மோசமான வானிலை காரணமாக பல்வேறு முக்கிய போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக மாகாண எல்லைகள் முழுவதுமாக திறந்தும் கூட பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3JJOvYa