கொரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் தேவை அதிகரித்தது. மாஸ்க், சானிடைசர், பிபிஇ கிட், கையுறை போன்றவற்றை பல்வேறு தரப்பினரும் அவரவர் நிர்ணயம் செய்யும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. சாதாரண முக கவசத்தை 10 ரூபாய்க்கும், N95 முக கவசத்தை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும் விற்பனை செய்து வரப்பட்டது. கிருமிநாசினி 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இதுபோன்ற மருத்துவ அத்தியாவசியப் பொருட்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து N95 முக கவசத்தின் விலை 22 ரூபாய், கிருமிநாசினி 200 மில்லி 110 ரூபாய் ஆகவும், இரண்டடுக்கு முகக் கவசம் 3 ரூபாயாகவும் மூன்று அடுக்கு முகக் கவசம் நான்கு ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பரிசோதனை கையுறை ஒரு செட் 5 ரூபாய் 75 காசாகவும் ஸ்டெரைல் கையுறை 15 ரூபாயாகவும், பிபிஇ கிட் விலை 273 ரூபாயாகவும், முகத்தை முழுதாக மறைக்கும் பிளாஸ்டிக் ஷீல்ட் விலை 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று ஃப்லோ மீட்டர் ஆயிரத்து 520 ரூபாயாகவும் பல்ஸ் ஆக்சி மீட்டர் ஆயிரத்து 500 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது இன்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 23 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 409 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். ஒரே நாளில் 31 ஆயிரத்து 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே பெரும்பாலான பகுதிகளில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் பணிகள் முடங்கியுள்ளன. மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தடுப்பூசிகள் கிடைத்தவுடன் தமிழகத்தில் முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Link Source: https://bit.ly/2TfbyVf