தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், ரெம்டெசிவர் மருந்துக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் விநியோகிக்கப்பட்ட வந்த ரெம்டெசிவர் மருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் ரெம்டெசிவர் மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்த நிலையில் ஊரடங்கு காலத்திலும் மருந்துக்காக அதிக அளவில் கூட்டம் கூடும் நிலை உருவானது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வந்த நிலையில் இதுவே தொற்று பரவும் அபாயம் ஆகவும் மாறியது.
அதே நேரத்தில் மருந்து தட்டுப்பாடு அதிகரித்ததன் காரணமாக கள்ளச்சந்தையில் மருந்து விற்பனையும் அதிகரித்து வந்தது. இவை அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதிகாரிகள், அமைச்சர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அரசு மருத்துவமனைகளை போன்றே தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக ரெம்டெசிவர்மருந்து வினியோகம் செய்யப்படும் என்றும் இனி தனியாக நோயாளிகளின் உறவினர்களிடம் மருந்து விற்பனை செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் நேரு விளையாட்டு அரங்கம், மதுரை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை உட்பட எட்டு இடங்களில் செய்யப்பட்டு வந்த
ரெம்டெசிவர் விற்பனை 17ஆம் தேதி திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது.
அதே நேரத்தில் ரெம்டெசிவர் மருந்தை தகுதிவாய்ந்த நபர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நேரடியாக நோயாளிகளின் உறவினர்களிடம் மருந்து சீட்டை அளிப்பதை மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் வேறு மாவட்டத்திற்கு பயணிக்க இ பதிவு முறை பதினேழாம் தேதி முதல் கட்டாயமாகிறது. அரசு அறிவித்துள்ள eregister.tnega.org இணையதளத்தில் பயணம் செய்வதற்கான உரிய காரணங்களை பதிவு செய்து அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 311 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். அதேநேரத்தில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் ஏராளமான தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய டெண்டர் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.