பிரிட்டனின் CORNWALL -ல் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், கனடா நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டின் இரண்டாவது நாளில் ஹாங்காங், தைவான் மற்றும் ஜிங்ஜியானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவை அனைத்தும் மிக நுட்பமான பிரச்சனைகள் என்றும் இவற்றை சீனா சரியாக கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதே போன்று, சீனாவில் பலமணிநேரம் கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் அராஜகமான போக்கை கண்டித்து அறிக்கை வருமாறு கூட்டமைப்பு நாடுகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஜி7 நாடுகளின் இந்த அறிக்கைக்கு சீனா கடும் எதிர்வினை ஆற்றி உள்ளது. லண்டனில் உள்ள சீன தூதர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் சீனா மீது உள்நோக்கத்தோடு இதுபோன்ற புகார்களை முன்வைப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் வஞ்சக எண்ணம் இது போன்ற குற்றச்சாட்டுகளாக வெளிப்படுவதாக லண்டனில் உள்ள சீன தூதரகம் சாடியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பொருளாதாரப் பின்னடைவை சரி செய்ய ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானது என்றும் சீன தூதர் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் இதுபோன்ற சிறிய குழுக்கள் பிளவை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சீனா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு என்றும், அதே நேரத்தில் தேவையான இடத்தில் உரிய ஒத்துழைப்பை வழங்கும் என்றும் லண்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடத் தேவையில்லை என்றும், தங்கள் நாட்டு தேசநலன், ஒற்றுமை, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சமரசமின்றி உரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் சீனா கூறியுள்ளது. இங்குள்ள அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3wta6xh