தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை தீவிரம் காரணமாக மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கு அமல்படுத்த அரசுடனான ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளங்களுடன் கூடிய ஊரடங்கு 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் அறிவிப்பு வந்ததிலிருந்து ஞாயிறுக்கிழமை இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன மேலும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இந்நிலையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர் இதுவே தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியது. மேலும் தனி மனித இடைவெளியும் காற்றில் பறந்தது.
இதனிடையே முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ஆக்சிஜன் படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவே முழு ஊரடங்கு என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்று பரவல் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஒரே நாளில் 35 ஆயிரத்து 483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் ஒரே நாளில் 422 ஆக உள்ளது. 25 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், போதுமான அளவுக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து முற்றுப் பெறவில்லை கட்டுப்படுத்த உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.