மெல்போர்ன் பகுதியில் மேலும் 4 பேருக்கு தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், விக் டோரியாவில் தற்போது தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உணவு பொருள் விநியோகிக்கும் பணியாளர் என்பதால், தொற்றுபாதித்த நபர் பயணம் செய்த அனைத்து கடைகளிலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
ஏற்கனவே 130 இடங்கள் தொற்று பாதித்தவர்கள் சென்ற இடங்களாக வகைப்படுத்தியிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது அந்த எண்ணிக்கையை 150 ஆக அதிகரித்துள்ளன.
மேலும் உணவு விநியோக ஊழியர் பயணம் செய்த இடங்களில் உள்ளவர்களையும், அவர் பணியாற்றிய இடங்களில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரி Brett Sutton , தொற்று பாதித்த பலர் அறிகுறியுடன் வெளியே சுற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உடலில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விக்டோரியாவில் கொரோனா ஊரடங்கால் சுமார் 2 பில்லியன் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று வணிக அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவர்களுக்கு தேவையான உதவியை மேற்கொள்ள அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.நேற்று 40 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை தற்போது 47 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
Link Source: https://ab.co/3uD7yeA