உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யூசஃப் , இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட முன்னாள் பைக் சாகச வீரர் யூசஃப் நாசியோக்லு (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த திங்கட்கிழமை சிட்னியிலுள்ள ரோடியோஸ் குடியிருப்புக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் யூசஃப் நாசியோக்லு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்தவரை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக முதற்கட்ட தகவல்களை வெளியிட்ட நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை கண்காணிப்பாளர் மார்டின் ஹேஸ்டன், மொத்தம் 10 குண்டுகள் யூசஃப் நாசியோக்லு மீது பாய்ந்துள்ளது. அவற்றில் பெரும்பாலும் தலைப்பகுதியை குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த யூசஃப், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பர்வுட் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் மார்டின் ஹேஸ்டன், இந்த தாக்குதல் யூசஃப் நாசியோக்லு மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகவே கருதப்படுகிறது. இறந்துபோன யூசஃப்பின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தவர்கள், இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறினார்.
முதற்கட்டமாக ரேடியோஸ் வாகன நிறுத்துமிடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் யூசஃப்பை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மர்ம நபர் ஒருவர் சில்வர் நிற சிறியளவிலான காரில் தப்பிச்செல்வது பதிவாகியுள்ளது. அருகாமையிலுள்ள பூங்கா வரை சென்ற அந்த கார், தீயிட்டு கொளுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவலர்கள் வரையறுக்கின்றனர். மேலும் 2020-ம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மின் ஹாவி கொலை வழக்கு விசாரணையில், யூசஃப் நாசியோக்லு விடுவிக்கப்பட்டார். அதற்கு பழிவாங்கவே ஹாவியின் ஆதரவாளர்கள் அவரை கொன்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.