இந்தோனேஷியாவில் மிருகங்களிடையே கால் மற்றும் வாய் என்கிற நோய் பாதிப்பு பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முக்கியமான நகரங்களிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், கிருமிநாசினி தடவிய மிதியடிகளில் வெறுங் கால்களில் நடக்கவைக்கப்படுகின்றனர். அதை தொடர்ந்து அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இது வெளிநாடுகளில் இருந்து வரும் உள்நாட்டவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியாவின் எல்லைப்புறப் பகுதிகளில் இந்நோய் பதிவானதாக எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் முன்கூட்டியே நோய் தடுப்புக்கான நடவடிக்கையில் விக்டோரியா மாநில அரசு களமிறங்கியுள்ளது. மெல்பேர்ன் மற்றும் வெர்ரிபீயிலுள்ள உயிரியல் பூங்காங்கள், ஹீல்ஸ்வில் சரணாலயம் போன்ற இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி குறிப்பிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள் மற்றும் கங்காருக்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வனவாழ் உயிரினப் பகுதிளில் சாகச பயணம் மேற்கொள்பவர்களை மிருகங்கள் உலாவும் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என பயிற்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விக்டோரியா அரசின் நோய் தடுப்பு குறித்து பேசிய கால்நடை மருத்துவர் கிரே, கால் மற்றும் வாய் நோய் பாதிப்பால் ஒட்டகச்சிவிங்கிகள், மிருகங்கள், யானைகள் மற்றும் பன்றி இனங்கள் போன்ற குளம்பின விலங்குகளுக்கு பெரும் ஆபத்துள்ளது. வீட்டில் இருக்கும் குதிரைகள், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் பத்திரமாக பராமரிக்க வேண்டும் என்றார்.
கால்நடைகளின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனடியாக மருத்துவத்துறைக்கும் நகர நிர்வாகத்தினருக்கும் உரிமையாளர்கள் தகவல் அளிக்க வேண்டும். மேலும் நாய், பூனை, பறவையினங்கள் போன்ற வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளையும் தற்போதைக்கு தடை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர் கிரே அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.