சீனாவில் தற்போது பிரபலமாக வளர்ந்து வந்த மத்திய தர ரியல் எஸ்டேட் நிறுவனமான Fantastia 282 மில்லியன் டாலர் அளவுக்கான கடன் பத்திரங்களுக்கான நிதியை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் நெருக்கடியில் சிக்கி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹாங்காங் பங்குச்சந்தை மூலமாக நிதி பரிவர்த்தனை தவறி உள்ளதாக கூறியுள்ளது. மேலும், அந்த நிறுவனத்துடனான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சமீப நாட்களில் ஒரு சில முன்னணி சீன ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களில் முன்னணி நிறுவனமான எவர்கிராண்ட் டெவலப்பர்ஸ் 400 பில்லியன் டாலர் அளவுக்கான கடனில் சிக்கியது குறித்த அறிவிப்பு வெளியானது.
அதன் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய கடன் பத்திரங்களுக்கான வட்டித்ததொகை 84 மில்லியன் டாலரை செலுத்த முடியாமல் தவித்து வந்தது. நிதி திரட்ட முடியாத நிலையில் பணத்திற்கு பதிலாக சொத்துக்களை திரும்ப அளிக்கும் நடவடிக்கையில் எவர்கிராண்ட் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாக வேண்டுமென, எவர்கிராண்ட் அதிதீவிரமாக 300 பில்லியன் டாலருக்கு மேல் கடன் வாங்கி விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. சீன அரசு, கடந்த ஆண்டு, பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறித்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது. புதிய விதிமுறையால் எவர்கிராண்ட் நிறுவனம், தன் வியாபாரத்தில் பணப்புழக்கத்தை உறுதி செய்ய அதன் சொத்துக்களை பெரும் தள்ளுபடியில் விற்க வேண்டி வந்தது.இப்போது, அந்நிறுவனம் வாங்கிய கடன்களுக்கான வட்டிச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது.
தற்போது Fantastia நிறுவனமும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அதன் சந்தை மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடன் பத்திரங்களுக்கான வட்டித் தொகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிதி கையாளும் முறையில் செய்த தவறுகளே இதுபோன்ற நெருக்கடிக்கு காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Link Source: https://ab.co/3ah28hj