தாஸ்மானியாவின் வடமேற்கு பகுதியான Devonport பகுதியில் உள்ள Hillcrest பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது ஆண்டு இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பள்ளியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.
Jumping Castle எனப்படும் மாணவர்கள் துள்ளி விளையாடும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிலிருந்து ஐந்து சிறுவர்கள் திடீரென தூக்கி வீசப்பட்டு உள்ளனர். சுமார் 10 மீட்டர் உயரத்தில் இருந்து அவர்கள் கீழே விழுந்த நிலையில் அருகிலிருந்த பலருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு சிறுவர்கள் இரண்டு சிறுமிகள் மற்றும் இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு சிறுவர் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமாக இரண்டு சிறுவர்களை அவசர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Hillcrest பிரைமரி பள்ளியில் நடைபெற்ற இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் உயிர் பிழைக்க வேண்டி பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே இந்த விபத்து மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்றும், குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தாஸ்மானியா காவல் ஆணையர் Darren Hine கூறியுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விபத்து நடந்ததை தொடர்ந்து பள்ளி உடனடியாக மூடப்பட்ட நிலையில் இதர மாணவர்களை பெற்றோர்கள் உடனடியாக வந்து அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ள தாஸ்மானியா ப்ரீமியர் Peter Gutwein இது தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை என்றும் சிறுவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். தாஸ்மானியா பள்ளிக்கல்வித்துறை படுகாயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
விபத்தில் சிறுவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டுள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், சிறுவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது அனுதாபத்தையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர் Antony Albanese-ம் தனது ஆழ்ந்த இரங்கலை விபத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
Link Source: https://bit.ly/3mfcvsm