பெருந்தொற்று காலத்தில் ஆஸ்திரேலியர்கள் யாரும் வர முடியாத நிலைக்கு பசுபிக் தீவில் எல்லைகள் மூடப்பட்டன. ஆனால், இந்த சூழல் அடுத்த சில மாதங்களில் மாறும் என்றும் விரைவில் சுற்றுலாவுக்காக எல்லைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் எல்லைகளை திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக 80% மக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச விருந்தினர்கள், சுற்றுலா பயணிகள் வரும்போது உள்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்வதில் கவனமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி இலக்கை எட்டி விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சர்வதேச விருந்தினர்கள் வருகையின்போது அவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஃபிஜி தீவின் சுற்றுலாத் துறை தலைமை செயல் அதிகாரி Brent Hill கூறியுள்ளார்.
உள்நாட்டு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உரிய பாதுகாப்புடன் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு பயணிகளால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் பிஜி தீவுக்கான விமான சேவைக்கு தற்போது Qantas விமான நிறுவனம் தனது விளம்பரத்தை தொடங்கியுள்ளது. பிஜி தனது எல்லைகளை திறக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவும் விரைவில் சர்வதேச எல்லைகளை திறக்கும் என்றும் பயணிகள் தயாராகும் படியும் Qantas விமான நிறுவனத்தின் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஃபிஜி தீவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும், முறையான பரிசோதனைகள் மேற் கொண்ட பின்னரே அவர்கள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் ஃபிஜி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஃபிஜி தீவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% அளவுக்கு சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தற்போது பெருந்தொற்று, முடக்கநிலை காரணத்தால் அது பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது மீண்டும் சுற்றுலாவுக்கான எல்லைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் அங்கு வர்த்தகம் மேம்படும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.
Link Source: https://ab.co/3nvC8XB