கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக ஆஸ்திரேலியாவில் பல்வேறு மாகாணங்களில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான ஆஸ்திரேலியர்கள் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே வெளிநாடுகளில் தங்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் 54 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் பலர் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்காக விண்ணப்பித்து உள்ளவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், பெருந்தொற்று காலத்தில் எடுக்க வேண்டிய உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, நெதர்லாந்து, லெபனான் லண்டன், அமெரிக்கா, பெரு உள்ளிட்ட 27 நாடுகளில் ஆஸ்திரேலியர்கள் சிக்கித்தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து மீட்கப்படும் ஆசிரியர்களை தனிமைப் படுத்துவதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்தந்த மாகாண அரசுகள் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பல்வேறு நாடுகளிலும் பயணத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஆஸ்திரேலியர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வருவதாகவும், இது படிப்படியாக களையப்பட்டு அனைவரும் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3js3Gth