கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் பல்வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். எல்லைகள் மூடப்பட்டது, விமான சேவை ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கையை படிப்படியாக மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவிற்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்துதல் முடித்து விரைந்து வீடு திரும்புவதற்கு வசதியாக முக்கிய விமான நிலையங்கள் அமைந்துள்ள மூன்று மாகாணங்களில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்க அந்த மாநில அரசிடம் மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற தேசிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் விமான நிலையங்களுக்கு அருகாமையில் தேர்வு செய்யப்பட்டு இருக்கக் கூடிய இடங்கள் மாகாண அரசால் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரிசன் மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடங்களில் தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விமான நிலையங்களுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடங்களில் தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டால் சர்வதேச பயணிகள் விரைவாக தனிமைப்படுத்தல் முடித்து பாதுகாப்பாக அவர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்ய முடியும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
சராசரியாக 500 படுக்கைகளுக்கு 200 மில்லியன் டாலர் நிதியும், 3000 படுக்கைகளுக்கு 700 மில்லியன் டாலர் நிதியும் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என்றும் அன்றாட பயன்பாட்டு பராமரிப்பு செலவுகளை மாநில அரசு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனிமைப்படுத்துதல் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் விமான சேவைகள் தொடங்கிய பின்னர் தனிமைப்படுத்துதல் மையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3h6qpdc