நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படிருந்தார். இவருக்கு அண்மையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு ரத்த உறைதல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். தற்போது அவர் உயிரிழந்திருப்பது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தடுப்பூசி செலுத்தப்படுவதால் தான் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அவருடைய மரணத்திற்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று சிகிச்சை பொருள் நிர்வாகத்துறையினர்( Therapeutic Goods Administration) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் TGA அமைப்பு பெண்ணின் உயிரிழப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் தலைமையில் விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஸ்காட் மாரிசன் தற்போது மருத்துவ நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தில் தான் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மற்றவர்களும் இதே அணுகுமுறையை கையாள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பெண்ணுக்கு கோவிட் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதால் ரத்த உறைதல் பாதிப்பு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டால் , ஆஸ்திரேலியா வில் ஏற்படும் மூன்றாவது ரத்த உறைதல் பாதிப்பாகும்.
இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவில் 13 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை, பெண்மணி மரணம் குறித்து யாரும் யூகங்களின் அடிப்படையில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ சிகிச்சை பொருள் நிர்வாகத்துறை இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை உடனுக்குடன் நியூ சவுத் வேல்ஸ் மாகாண மருத்துவர்கள் சிகிச்சை பொருள் நிர்வாகத் துறைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்ததாகவும் அவர்களுடைய சிறப்பு மருத்துவர் குழு இதுபோன்ற பாதிப்புகளை கண்டறிந்து உரிய முடிவை தெரிவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது .
உயிரிழப்புகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிகழக் கூடியது என்றாலும் இந்த விவகாரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பதை உறுதியாக கூறும் வரை எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என்றும் மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி செலுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக Pfizer தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டு, ஜூன் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.