நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேற்கு நதி பகுதிகள் மற்றும் Mid North Coast பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் இது வாழ்வாதாரத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே அந்த பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கு அவசர கால சேவை மையத்திற்கு மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு Lismore, Kyogle பகுதிகளுக்கு Wilsons River நதியிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களுக்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. Lismore CBD பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்தும் மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாகாண காவல்துறை ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை மற்றும் அவசரகால சேவை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மக்களை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், முடிந்தவரை உயிரிழப்புகளை தவிர்க்கும் வண்ணம் மக்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவசர கால சேவை மையத்தின் Scott McLennan கூறியுள்ளார்.
மிதமானது முதல் அதி தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு இருக்கும் நிலையில், இதுவரை கண்டிராத மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இது பெரும்பான்மை குடியிருப்பு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்றும் அவசர கால சேவை மையம் தெரிவித்துள்ளது. மீட்பு ஹெலிகாப்டர்கள் அவசரகால விமானங்கள் மற்றும் மீட்பு படையினர் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் முகாம்கள் அமைத்து மீட்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்கான உரிய ஏற்பாடுகளை மாகாண அரசு மேற்கொண்டு இருப்பதாகவும், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள மையங்களில் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். உரிய முன்னெச்சரிக்கைகள் கிடைத்திருக்கும் நிலையில் சூழலை எதிர் கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் வெள்ள பாதிப்புகளிலிருந்து முடிந்தவரை மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறை ஆணையர் Mal Lanyon கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3Drj6aD