ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இயல்பை விட பல மடங்கு அதிகமாக மழைப்பொழிவு இருந்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் இதனிடையே மீண்டும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சிட்னியின் தென்மேற்குப் பகுதிகளில் இருக்கக்கூடிய குடியிருப்புவாசிகள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேறி நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பாதிப்புக்கு உள்ளான Sheathers Lane, Kirkham Lane, Poplar Caravan park மற்றும் Menangle Road சில பகுதிகளில் இருந்தும் இருப்பு வாசிகள் உடனடியாக வெளியேறுமாறு மாகாண அவசர சேவை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்ட இடங்களில் இருந்து இரவுக்குள்ளாக மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 50 முதல் 150 மில்லி மீட்டர் வரை கன மழை பெய்யக் கூடும் என்பதால் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி இருக்கக்கூடிய மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் தவித்து வருவதாகவும், எனவே மக்கள் தங்களுக்கு தேவையான உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது நிவாரண முகாம்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தி வருவதாக மாகாண அவசர சேவை மையத்தின் ஆணையர் Carlene York தெரிவித்துள்ளார்.
மேற்கு சிட்னியின் பெர்னித் உள்ளிட்ட சில பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்புகள் 2000 பேர் முழுமையாக தங்களது வீடுகளை இழந்து உள்ளதாகவும் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மாகாண அரசு மேற்கொண்டு வருவதாகவும் நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Dominic Perrottet கூறியுள்ளார். மேலும் மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் 5 ஆயிரம் பேர் கொண்ட மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் மக்கள் அவர்களது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நாட்களை தான் எதிர்பார்த்து இருப்பதாகவும் Dominic Perrottet கூறியுள்ளார்.
மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக தனித்து விடப்பட்டு உள்ள பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்கி அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருவதாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண ப்ரீமியர் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/361Wpxf