இந்தோனேஷியாவில் கிழக்குப் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் கால்நடைகளுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் கால்நடை துறை பெரும் இழப்பை காணும் என்று வேளாண்மை, நீர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு ஐக்கிய ஒன்றியத்தில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்ட போது, அந்நாட்டிலுள்ள விவசாயகள் தாங்கள் வளர்த்து வந்த லட்சக்கணக்கான கால்நடைகளை உயிருடன் எரித்துக் கொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்தளவுக்கு இந்நோயின் தாக்கம் தீவிரமாக அப்போது கணிக்கப்பட்டது. அதே தீவிரம் தற்போது நிலைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை ஆஸ்திரேலியாவில் கால் மற்றும் வாய் நோய் பாதிப்பு கால்நடைகளுக்கு ஏற்பட்டால், நாட்டின் ஒட்டுமொத்த இறைச்சி ஏற்றுமதி துறை பாதிக்கப்படும். அதன்மூலம் குறைந்தது 25 பில்லியன் டாலர் வர்த்தக இழப்பைச் சந்திக்க நேரிடும். மேலும் பால் பொருட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி துறையில் 50 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படக்கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.