ஆஸ்திரேலியாவில் எதிர்பாராதவிதமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழப்போரில் சராசரியாக 50 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்துக்கு திடீரென ஏற்படும் மாரடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. இதுதொடர்பாக விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது, அவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழந்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அடுத்தக்கட்ட ஆய்வில் விக்டர் சாங் இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபடத் துவங்கியது. அதில் பேராசிரியர் ஜேமி வாண்டன்பெர்க் தலைமையிலான குழு வெற்றி அடைந்துள்ளது. இவர்கள் ஒரு மின்சாரத் திரையிடல் சோதனை கருவியை கண்டுப்பிடித்துள்ளனர். இதன்மூலம் திடீரென மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறியலாம் என்று குழுவினர் கூறுகின்றனர்.
இருதயத்தில் மின் சமிக்ஞைகளை கட்டுப்படுத்தும் புரதச் சத்துக்களை கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜேமி வாண்டன்பெர்க் கூறுகிறார். மூளை, தசைகள், சிறுநீரகங்கள், இரைப்பை குடல் அமைப்பு ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு மின் சமிக்ஞைகள் தேவை. அதன்மூலம் இந்த ஆய்வு முதற்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
அதேசமயத்தில் சிலருக்கு மரபணு ரீதியாக இருதய அடைப்பு ஏற்படக்கூடும். அப்படிப்பட்டவர்கள் சி.பி.ஆர் குறித்து கற்று அறிந்திருக்க வேண்டும். அவர்களுடன் இருக்கும் நபர்களும் சி.பி.ஆர் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இந்த சோதனை கருவி முழுமையாக வெற்றி அடையும் பட்சத்தில், அப்படிப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று பேராசிரியர் ஜேமி வாண்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.