தென் ஆப்ரிக்காவில் தொடங்கி ஒமைக்ரான் திரிபு வைரஸ் ஆஸ்திரேலியாவின் பெரும்பாலாண மகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சர்வதேச மற்றும் மாகாண எல்லைகள் திறக்கப்படும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையில் அனைத்து மாகாண பிரதிநிதிகள் மற்றும் யூனியன் பிரதேச தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவது, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மற்றும் எல்லைகளை திறப்பதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான TATAGI, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நியூசவுத் வேல்ஸ் உள்ளிட்ட மகாணங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறைந்தது 5 மாத இடைவெளி இருந்தால் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை சுகாதார அதிகாரி Paul Kelly அனைத்து மகாண தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அது AHPPC அமைப்பின் சார்பாக எழுதப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளரங்குகள், வணிக நிறுவனங்கள், ஒட்டல்கள் பொழுதுபோக்கு மையங்களில் முகக் கவசம் கட்டாயம் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் திரிபு வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாகாண தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், பொது சுகாதார விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
Link Source: https://bit.ly/3pfyq4T