ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கடந்தாண்டில் மட்டும் நுகர்வோர் பொருட்களின் விலை 5.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அடகுவைத்த பொருட்களுக்கு திருப்பிச் செலுத்தும் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகதத்தை 0.25 சதவீதம் வரை அதிகரித்துவிட்டன. ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையை 1.4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது சாமானியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுடுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு துவங்கியுள்ளதை அடுத்து, விக்டோரியா அரசு தனது பொருளாதார கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி வீடுகளுக்கான மின்சார கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று நகர்புறங்களில் வாழும் மக்களுக்கு ஓராண்டுக்கான தண்ணீர் வரி 1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஓராண்டுக்கான தண்ணீர் வரி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் நகர்ப்புற சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் 1 சதவீதம் வரையும், விக்டோரியாவில் இருந்து கிழக்கு மார்க்கம் செல்லும் சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் 2.7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களுக்கு வசூலிக்கப்பட்டும் அபராதத் தொகைக்கான கட்டணம் நடப்பு கணக்கில் இருந்து 1.72 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.