பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்ற கேட்டரிங் மற்றும் உணவு வர்த்தக கண்காட்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது, கண்காட்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்த அதிபர் மீது அங்கிருந்த நபர் ஒருவர் முட்டையை வீசினார். மேக்ரானின் தோள் பட்டையில் விழுந்த அந்த முட்டை உடையாமல் கீழே விழுந்தது.
எதிர்பாராத அந்த சம்பவத்தை அடுத்து பாதுகாவலர்கள் உடனடியாக அதிபரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். மேலும், முட்டை வீசிய நபரை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
அதே நேரத்தில் தன்னிடம் அவர் எதுவும் சொல்ல விரும்பினால், வந்து தெரிவிக்கலாம் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரங்களோ அல்லது எதற்காக முட்டையை வீசினார் என்பது குறித்த விவரங்களோ காவல்துறை தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுவெளியில் பிரான்ஸ் அதிபர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் ஜீன் மாதத்தில் சிறிய நகரம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் நபர் ஒருவர் அதிபரின் கன்னத்தில் அறைந்தார். அதனை அடுத்து தற்போது முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
பெரும்பாலும் மக்கள் சந்திப்புகளை அதிகம் விரும்பும் அதிபர் இம்மானுவே மேக்ரான் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டு மக்களிடம் உரையாடுவது வழக்கம். இந்நிலையில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பங்கள் அரசியல் நோக்கில் நடத்தப்படுபவை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்னும் 6 மாத காலத்தில் பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தான் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை இதுவரை இம்மானுவேல் மேக்ரான் வெளியிடவில்லை. அவர் விரைவில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Link Source: https://ab.co/3B5v4VD