பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது மொத்தமுள்ள 324 உறுப்பினர்களில் 174 உறுப்பினர்களின் வாக்கை பெற்றதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி அடைந்தது. இதனையடுத்து இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலமாக முதன்முறையாக பதவி விலகிய பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் உள்ளார்.
இதனை கண்டித்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க் கட்சி கூட்டணிக்கு எதிராக இம்ரான்கான் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இம்ரானின் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி கொடிகளை கையில் ஏந்திய அவரது ஆதரவாளர்கள், இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், கைபர், ஜாங், குவெட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஜனநாயகப் பூர்வமாக இம்ரான்கான் கானுக்கான கடைசி குரல் மக்கள் மத்தியில் இருந்து ஒலிக்கும் வரை அவருக்கான மக்கள் ஆதரவு உறுதி செய்யப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளனர் அவரது 70 வயதான சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஆகிறார்.
இதனிடையே பாகிஸ்தானில் நடைபெற்று வரும் அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இதுபோன்ற சதித் திட்டங்களைத் தீட்டி ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்படுத்தியதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு முன்பாகவே மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஏராளமான ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருக்கான ஆதரவை தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய நடைபெற்று வரும் போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றும், ராணுவம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
Link Source: https://ab.co/37CrI2j