மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து டெல்டா வகை வைரஸ் பாதிப்பு பதிவாகி வரும் நிலையில் மேலும் புதிதாக இருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை வரை உள் அரங்குகளில் இருந்தாலும், வீடுகளில் இருந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Amber-Jade Sanderson உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக தொற்று பாதித்தவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 20 வயது இளைஞர் மற்றும் அவருடன் இருந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24 வயது இளம்பெண் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இருவருக்கும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து Cannington பகுதி தொற்று பரவ மையமாக கண்டறியப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உள்ளரங்க நிகழ்வுகளில் பங்கேற்கும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விதிமுறைகள் மதுபான கூடங்கள், விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறும் நபர்கள் மீது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் வரை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டங்கள் இன்னும் முடிவடையாத நிலையில் அதுவரை பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதன் மூலமாகவே தோற்று பரவல் மையங்கள் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்றும் மேற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் Amber-Jade Sanderson தெரிவித்துள்ளார்.
இதனிடையே தொற்று பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், குறிப்பிட்ட நபரின் மாதிரி மரபணு பரிசோதனை அனுப்படுவதாகவும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டால் அதற்கான உரிய வழி காட்டு நெறிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் Amber-Jade Sanderson குறிப்பிட்டுள்ளார்.
Link Source: https://ab.co/3ESsd32