ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகள் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், போர் முடிவுக்கு வந்தாலும் பாதிப்புகள் குறைவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஐரிஷ் தூதரான Geraldine Nason கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான போர் குறித்து ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்ற நிலையில், உலக நாடுகள் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து பல்வேறு தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல் எதிரொலியாக நிதிச் செலாவணி மற்றும் பங்குச் சந்தைகள் சந்திக்கும் பாதிப்பை தற்போது வரை யாராலும் உணர முடியவில்லை என்றும் Geraldine Nason தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான பங்குச்சந்தைகளில் வெளியாகி வரும் செய்திகள் கவலையை ஏற்படுத்தி வருவதாகவும், உலகளாவிய சந்தையில் போர் ஏற்படுத்தும் தாக்கம் கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் கடுமையான இழப்பை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ள Geraldine Nason, சந்தையின் நிலைக்கு ஏற்ப அதனை கையாள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் மீதான போர் காரணமாக ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகள் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், ஒரு நாளின் உச்சபட்ச வீழ்ச்சியாக கடந்த 2020க்கு பிறகு 6 ஆயிரத்து 991 புள்ளிகளாக சரிந்தது. இதன் காரணமாக 74 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலியாக பல்வேறு நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் விலையயை உயர்த்தி உள்ளதன் காரணமாக எரிபொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போர் பாதிப்புகள் எரிபொருள், விமானப் போக்குவரத்து, நிதி உள்ளிட்ட துறைகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்துள்ளது. போர் முழுமையாக முடிவுக்கு வந்தாலும் அதன் தாக்கத்தில் இருந்து மீள்வது கடினம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3pguWP3