ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பயணிகள் சிலருக்கு மிக வேகமாக தொற்று பரவிவரும் காரணத்தால், அடுத்த சில நாட்களுக்கு விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விமானங்களை குறைக்கும் நடவடிக்கையை ஏனைய நாடுகளில் உள்ள ஆஸ்திரேலியர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், சர்வதேச விமான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவே ஊரடங்கு நடவடிக்கைகளை குறைத்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும் விக்டோரியா பிரிமியர் கூறியுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் பீல், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னியில் சில மேற்கு பகுதிகள் என பல்வேறு இடங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில், அடுத்தடுத்து தனிமைப்படுத்துதல் முகாமில் இருப்பவர்கள் புதிய வகை வைரஸ் மூலமாக பாதிக்கப்பட்டு வருவதாக பிரிமியர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச விமானங்கள் மூலமாக வருகை தருவோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதே இதற்கு தீர்வாகும் என்று கூறப்பட்ட நிலையில், மெல்போர்னில் உள்ள ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தங்களை ஆஸ்திரேலிய அரசு அரசியல் காரணங்களுக்காக பந்தாடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அரசு முதலில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேசிய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோரிசனின் ஒப்புதலைப் பெற்று விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து பிரீமியர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். சர்வதேச விமானங்களின் வருகை 80 சதவீதம் அளவிற்கு கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருப்போரின் எண்ணிக்கையை சராசரியாக குறைக்க முடியும் என்றும் தொற்று பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும் அதனை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மற்ற நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவில் குறைவான நபர்களே தடுப்பூசி போடப்பட்டு இருப்பதால் புதிய வகை வைரஸ் தான டெல்டா அதிவேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் சுகாதாரத்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3h6nhyV