இந்தியாவில் தொற்று எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகதிரித்து நாடு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது கலவையான உணர்வுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
நாளொன்றின் உச்சபட்ச தொற்று பதிவுகளோடு 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகள் படுக்கைகள் இன்றி நிரம்பி வழிவதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆஸ்திரேலிய அரசு இந்தியாவில் இருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையை 30% குறைத்துள்ளது. அதேநேரம் கடந்த இரண்டு வாரங்களாக பரிசோதனையில் நெகடிவ் ஆகி மூன்று நாட்களுக்குள் அவர்கள் பயணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு்ள்ளது.
இந்தியாவில் தொற்று பரவல் முக்கிய பிரச்சனையாக உள்ள நிலையில் தற்போது விமானங்களை குறைத்தது சரியான முடிவு தான் என்று நியூ சவுத் வேல்ஸ் இந்தியர்கள் கூட்டமைப்பின் டாக்டர். யதுசிங் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா தன்நாட்டு மக்களை தாண்டி மற்ற நாட்டினரின் உடல் நலம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்துவதால் அரசின் இந்த முடிவை வரவேற்பதாக யதுசிங் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளது பலருக்கு தனித்துவிடப்படும் சூழலுக்கு தள்ளியுள்ளது. மெல்பர்னில் உள்ள தனது கணவரை சந்திப்பதற்காக கடந்த ஒராண்டுக்கும் மேலாக தனது 14 மாத குழந்தையுடன் காத்திருந்த பவ்நீத் கவுர் கடந்த வாரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். தற்போது விதிக்கப்பட்டு்ள்ள விமான கட்டுப்பாடுகள் அவரை மேலும் சில மாதங்கள் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளியுள்ளது. தனது குழந்தையை பார்க்காமல் பிரிந்து ஓராண்டுக்கும் மேலாக தவிக்கும் கணவருக்கு இது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக பவ்நீத் கவுர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும் என்றும், மாகாண அரசுகள் கேட்டுக் கொண்டால் அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்கள் சிட்னி மற்றும் டார்வினுக்கு மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் 13 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 18 பேர் தொற்று பாதிப்பு கொண்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் விகிதம் 10 ல் இருந்து 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தற்போதைய சூழலில் இந்தியா முழுமைக்கும் மோசமான நிலையே காணப்படுகிறது.
Link Source: https://cutt.ly/Qv4heYQ