விக்டோரியாவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் விக்டோரியாவில் ஒரு நாள் வைரஸ் பாதிப்பு ஆயிரத்து 254 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.
சுகாதாரத்துறையின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விக்டோரியாவுக்கு பயணிப்பதற்கான பயண அனுமதி தேவையில்லை. அதே நேரத்தில் தேசிய அளவிலான பயணத்திற்கு இன்னும் சில வழிமுறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், உள்நாட்டு பயணத்திற்கான தடைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பயணம் செய்வோர் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிப்பதாகவும், ஜனவரி 2021 நடைமுறைக்கு வந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10 ஆயிரத்து 276 பேர் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், டெல்டா வகை வைரஸ் பாதிப்பல் 486 பேர் உயிரிழந்து விட்டதாகவும் விக்டோரிய சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. 310 பேர் மருத்துவமனையில் உள்ள நிலையில், 48 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களில் 31 பேருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் மாகாணத்தில் உள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3FUrb7M