தமிழகத்தில் நாளுக்கு நாள் அவற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் பேருக்கு ஒரு தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறுப்பேற்ற புதிய அரசு மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து 10ம் தேதி திங்கட்கிழமை முதல் 24ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர் தடுப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். இது மட்டுமின்றி மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு 14 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தமிழகத்திற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவத் தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை ஏற்று மத்திய அரசு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்திருந்தது.
மேலும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து இரண்டு விமானங்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 5 லட்சத்து 89 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 50 பார்சலில் வந்தன. அதே போன்று ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 530 தடுப்பூசி மருந்துகள் 37 பார்சல்களில் வந்தன. ஒரே நாளில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் மருத்துவம் மற்றும் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரேநாளில் 28,897 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வயதிற்கு உட்பட்ட 1012 சிறார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் மிக அதிகபட்சமாக 7 ஆயிரத்து 130 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 236 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் 85 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 151 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 23 ஆயிரத்து 315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது.
Link Source: https://bit.ly/33s0WnR