பிரிஸ்பேனிலுள்ள ஊரகப் பகுதி ஸ்ட்ரீட்டன். கடந்த திங்களன்று காலை 9.32 மணியளவில் அங்குள்ள கூலிட்ஜ் தெருவில் அமைந்துள்ள வீட்டில் இரண்டு பேர் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், வீட்டின் மேல் தளத்தில் 40 வயது மதிக்கத்த பெண்ணும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞனும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்துகிடப்பதை கண்டனர்.
மேலும் சடலங்களுக்கு அருகில் கிடந்த, அவர்களை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து அதே வீட்டில் இருந்த 49 வயது நபரை காவலர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவருக்கும் இறந்துபோன இருவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துவந்ததை முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த புலனாய்வுத்துறையின் கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மேசின்ஹம் ஸ்ட்ரீட்டன் கூலிஜ் தெருவில் நடந்தது படுகொலை என்பதை உறுதி செய்தார். கொலை செய்யப்பட்டவர்களின் செல்போன் உள்ளிட்ட உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுடைய விபரங்கள் அறிவிக்கப்படும். இந்த சம்பவம் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.