நாட்டுமக்களுக்கு வானொலி வழியே பிரதமர் உரையாற்றும் மன் கீ பாத் 76 வது நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் இந்தியா சந்தித்து வரும் மோசமான நிலை குறித்தும், கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைத்தார்.
தடுப்பூசி தொடர்பான எந்த வதந்திகளையும் நம்பி அதற்கு இரையாக வேண்டாம் என்றும், வழக்கம்போல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், மே 1ம் தேதி முதல் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் பிரதமர் கூறினார். முழுவதும் இலவசமாக செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தை மாநில அரசுகளும் பயன்படுத்தி முடிந்தவரை அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி சென்று சேர செய்ய வேண்டும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
இரண்டாவது அலை நமது அமைதியை சோதிப்பதாகவும், நம்மிடையே வாழ்ந்து வந்த பலரை அடுத்தடுத்து கொரோனாவுக்கு இழந்திருப்பதாகவும் கூறினார். முதல் அலையை சிறப்பாக கட்டுப்படுத்தியதன் மூலம் உற்சாகமும், நம்பிக்கையும் நாட்டு மக்களிடையே பிறந்ததாக கூறிய மோடி, ஆனால் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கி விட்டாதாக தெரிவித்துள்ளார்.
மன் கீ பாத் உரையில் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்டோர் பங்கேற்று தற்போதுள்ள கொரோனாவின் தீவிரம் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினர். மேலும், ரெம்டிசிவிர் மருந்தின் தேவை தற்போது எந்த அளவுக்கு உள்ளது என மருத்துவரிடம் பிரதமர் கேள்வி எழுப்பினார். தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை படியே ரெம்டிசிவிர் வழங்கப்படுவதால் அதன் தேவை தற்போது கட்டுக்குள் உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். மேலும், பிராணாயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளை செய்யவும் அவர் அறிவுரை கூறினார்.
பெரும்பாலான மருத்துவர்கள் தங்களது சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவதையும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, மருத்துவர்கள் நம்பகப்பூர்வமான தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பல்வேறு முக்கிய மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடமும் பிரதமர் தகவல்களை கேட்டறிந்தார். இக்கட்டான நிலைமை எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்து அவர்களும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதேநேரம், பிரதமரின் மன் கீ பாத் உரை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி வருவதை பிரதமர் உணர வேண்டும் என்றும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link Source: https://cutt.ly/Qv4TMai