டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை பொருட்படுத்தாமல் பெருமளவு மக்கள் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், வணிகரீதியான பயணத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு விடுமுறையை கழிப்பது போன்று சென்று வருவது கண்டனத்திற்கு உரியது என்றும் மேற்கு ஆஸ்திரேலிய பிரிமியர் காட்டமாக கூறியுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் பீல் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 1500 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலான பயணங்கள் தேவையற்றவை என்றும் Mark McGowan கூறியுள்ளார்.
வெளிநாட்டு பயணங்கள் மூலமாக தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதை அறிந்தும் இதுபோன்ற தேவையற்ற பயணங்களை பெருமளவு மக்கள் மேற்கொண்டு வருவது குறித்து அவர் தனது கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரே தரப்பு ஆட்கள் நான்கிலிருந்து எட்டு முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு இருப்பதாகவும் இதன் மூலம் எளிதில் தொற்று பரவலை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தேவையற்ற பயணங்களுக்காக மக்களை அனுமதிப்பது என்பது அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்றும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ப்ரீமியர் Mark McGowan எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு வணிக ரீதியிலான மாநாட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பணியை முடித்துவிட்டு விடுமுறை காலத்தை கழிப்பது போன்று அங்கு தங்கிவிட்டு, மீண்டும் நாட்டிற்கு திரும்புவது, தனிமைப்படுத்துதலில் இருப்பது இங்கு தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ள ப்ரீமியர், இது சரியான நடவடிக்கை அல்ல இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொழில், வர்த்தகம், மருத்துவம் படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்பவர்கள் அதற்கான உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருந்துட்டு காலத்தில் இருக்கிறோம் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், உள்நாட்டிலேயே உள்ள வர்த்தகம், வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரீமியர் Mark McGowan கேட்டுக்கொண்டுள்ளார்.
Link Source: https://ab.co/2UgWxTI