குயின்ஸ்லாந்தில் டிசம்பருக்குள் 80% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்குடன் மாகாண அரசு செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 17 ஆம் தேதியன்று எல்லைத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ள குயின்ஸ்லாந்து மாகாண பிரிமீயர் Annastacia Palaszczuk, சிறப்பு தடுப்பூசி முகாம்களையும் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மாகாணத்தில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 28,994 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 113 பள்ளிகளில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் மட்டும் சுமார் 13,000 பேர் தடுப்பூசி செலுத்திக்க்கொண்டதாக காவல்துறை துணை ஆணையர் Shane Chelepy தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தினால் விரைவாக இலக்கை எட்ட முடியும் என்று குயின்ஸ்லாந்தின் முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி ஜென்னட் யங் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த எண்ணிக்கை சற்று ஆறுதல் அளித்தாலும், பூர்வக்குடி மக்கள் அதிகம் வசிக்கும் Rockhampton, Mackay, the Isaac region போன்ற பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக காவல்துறை அதிகாரி Shane Chelepy வருத்தம் தெரிவித்துள்ளார். அதற்கு தடுப்பூசி குறித்து அந்த மக்களிடையே காணப்படும் தயக்கம் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கோல்ட்கோஸ்ட் பகுதியிலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 70.4% சதவீதமாகவே உள்ளது. இது குயின்ஸ்லாந்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது குறைவாகும்.
20-29 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. திட்டமிட்ட படி 80% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை குயின்ஸ்லாந்து எட்டியவுடன், எல்லை தளர்வுகள் கொடுக்கப்படும் என்று பிரிமீயர் Annastacia Palaszczuk உறுதியாக தெரிவித்துள்ளார். அப்போது தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளில் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், அதனால் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடலாம் என்றும் பிரிமீயர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நிகழும் பட்சத்தில் எந்த விதமான உதவியும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குயின்ஸ்லாந்தில் தடுப்பூசியை அனைவரிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் வரும் நாட்களில், பொழுது போக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
Link Source: https://ab.co/3ClMayX